Saturday 28 August 2021

புலிகுத்தி நடுகற்கள், காங்கயம்பாளையம், செங்கப்பள்ளி அருகே, திருப்பூர் மாவட்டம்.

                   நடுகல் வழிபாடு என்பது பொதுமக்கள் நலனுக்குக்காக சண்டையிட்டு வீரமரணம் அடைபவரின் நினைவாக கல் நட்டு வழிபடுவதே ஆகும் . நடப்பட்ட கல்லின் மீது வீரனின் உருவமும் , அவன் இறப்பை பற்றிய குறிப்பும் பொறிக்கப்படும் .  நடுகல் வழிபாடு என்பது வீரத்தை அடிப்படையாக கொண்ட வழிபாடு . இவை பற்றி சங்க இலக்கியத்தில் நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன . கிராமங்களில் இன்றும் நடுகற்களை சிறுதெய்வங்களாக வணங்கி வருகின்றனர் . 

                        திருப்பூர் மாவட்டம் , செங்கப்பள்ளி அருகே காங்கயம்பாளையம் என்னும் ஊரில் மூன்று நடுகற்கள் காணப்படுகிறது . இவற்றில் இரண்டு புலிக்குத்தி நடுகற் கள் மற்றொன்று நினைவுக்கல் ஆகும் . முதல் புலிக் குத்தி கல்லில் புலி தன் வாயை திறந்த நிலையில் வீரன் மேல் பாய்வது போலவும் , வீரன் ஈட்டி ஆயுதத்தால் புலியை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது. புலியின் முன்னங்கால்கள் இரண்டும் தன்னை தாக்க வரும் வீரனை எதிர்த்து தாக்குவது போல உள்ளது . வீரனுக்கும் புலிக்கும் நடுவே ஒரு நாய் புலியை நோக்கி பாய்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் . கல் பொரிந்த நிலையில் உள்ளது .கல்வெட்டுகள் காணப்படவில்லை .

                                இதற்கு அடுத்து ஒரு நினைவுக்கல் உள்ளது . இதில் வீரனின் உருவம் இரு கைகளையும் கூப்பியநிலையில் காட்டப்பட்டுள்ளது . இது வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட கல் ஆகும் . 

                           மூன்றாவதாக மற்றொரு புலி குத்தி கல் காணப்படுகிறது . இதில் புலி வாயை திறந்த நிலையில் பாய்வது போலவும் அதன் முன்னங்காலில் ஒரு கால் வீரன் தோள் பட்டை மீதும் மற்றொரு கால் வீரனின் தொடையை பிடித்து இருப்பது போலவும் , வீரனும் தன்னை தாக்க வரும் புலியை ஈட்டியைக் கொண்டு தாக்குவது போலவும் காட்டப்பட்டுள்ளது . இதில் வீரனின் முகம் நேராக நம்மை பார்ப்பது போல உள்ளது . இதுவும் 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது . இதிலும் கல்வெட்டுகள் காணப்படவில்லை .



                              

                                                                                                                 
                                

3 comments: